பெங்களூரு: முன்னாள் முதல்வர், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் செல்போன் அழைப்பை ஒட்டு கேட்ட விவகாரம் தொடர்பாக பெங்களூரு மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனரும், தற்போதைய ஏடிஜிபி.யுமான அலோக் குமாரின் வீட்டில் 5 பேர் கொண்ட சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பென்டிரைவ், லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி அமைந்த நாள் முதல் ஆட்சி கவிழ்ப்பு நடைபெற்ற நாள் வரைக்கும் சில அரசியல் பிரமுகர்கள், ஐ.பி.எஸ் அதிகாரிகளின் செல்போன் அழைப்புகள் ஒட்டு கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதற்கு காரணமாக அப்போதைய மாநகர போலீஸ் கமிஷனர் அலோக் குமார் இருந்துள்ளார். குமாரசாமியின் ஆட்சியில் மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த அலோக் குமார் தற்போது கே.எஸ்.ஆர்.பி.யின் ஏடிஜிபி.யாக உள்ளார். அவரின் உத்தரவின் பேரில் செல்போன் அழைப்புகளை ஒட்டு கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.முன்னாள் முதல்வர் சித்தராமையா, அவரது உதவியாளர்கள், தற்போதைய முதல்வர் எடியூரப்பா, அவரது உதவியாளர், அதிருப்தி எம்எல்ஏ.க்கள், அல்சூர்கேட் டி.சி.பி, மத்திய மண்டல டி.சி.பி அலுவலக போலீசார், புதிய போலீ்ஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் உள்பட 40 பேரை குறிவைத்து இந்த ஓட்டுகேட்பு நடத்தப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் அலோக் குமாரின் வீட்டில் இருந்தபடியே ஒட்டு கேட்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பாஜ ஆட்சி அமைந்த ஒரு வாரத்தில் பெரிய பூதாகரமாக வெடித்தது. முந்திய ஆட்சியில் சிறப்பு புலனாய்வு குழுவின் (எஸ்ஐடி) விசாரணையில் இருந்த இந்த வழக்கு, எடியூரப்பா முதல்வராக பதவியேற்ற பின்னர் சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ அதிகாரிகள், செல்போன் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக பல்வேறு ஆதாரங்களை திரட்டினர். இதையடுத்து, சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று அதிகாலை ரிச்மண்ட் சர்க்கிள் பகுதியில் உள்ள அலோக் குமாரின் வீட்டில் சோதனை நடத்தினர். 5 பேர் கொண்ட சி.பி.ஐ அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். 8 மணிக்கு தொடங்கிய சோதனை 2 மணி நேரமாக நீடித்தது. லேப்டாப், பென்டிரைவை கைப்பற்றிய சி.பி.ஐ அதிகாரிகள் அது தொடர்பாக விசாரணை நடத்தினர்.அதில் செல்போன் ஒட்டுகேட்பு விவகாரத்திற்கு யார் அனுமதி கொடுத்தது. உள்துறையிடம் இருந்து முறையான அனுமதி பெறப்பட்டதா, முதல்வர் கூறிதான் இந்த ஒட்டுகேட்பு நடத்தப்பட்டதா என்று கேள்விகள் கேட்கப்பட்டது. இந்த கேள்விகளுக்கு அலோக் குமார் முறையான பதில் அளித்ததாக கூறப்படுகிறது.